Thursday, March 6, 2008

அம்மாவுக்காக.....


பிறந்த நாள் முதல்
அம்மாவின் அரவணைப்பு
இன்று வரை....

என் அழுகுரல் கேட்டு
அணைத்தெடுத்து
உதிரம் வார்த்தவள்

ஆள்காட்டி விரல் பிடித்து
உலகை காண்பித்தவள் ...
பள்ளி பருவ நாட்களில்
பாடம் சொல்லி கொடுத்தவள் - என்
பார்வையயை தீட்டி
செதுக்கியவள்
பயிற்றுவித்தவள்....

பெண்மை எனும் நேரம்
நான் அடைந்த பொழுது
கண்ணிமைக்காமல் காத்தவள்....
கல்லூரி வாழ்வில்
என் தோழியவள்
காதலி அவள்...
நான் உறங்க
அவள் விழிப்பாள்...
நான் வாழ கண்ணீர் சிந்துவாள்...
ஆயிற்று
அப்படி இப்படி என்று
இருபத்தி நான்கு...

என்னை அறிமுகப்படுத்தியவள் - இன்று
இன்னொருவன் கையில்
கரம் சேர்க்க ஆயத்தம்....
கற்பனைகள் சிதறும் என்னுள்
காட்டாற்று வெள்ளமாய்
காதலனுடன் அல்ல..என்னை

உலகுக்கு அறிமுகம் செய்ய...
விவாதம் செய்ய வில்லை
விவாஹம் செய்ய சம்மதம் -என்
ஆசைகளை துறந்தேன்
அறிவு கொடுத்தவளுக்காக...
முழு மனதுடன்
மணவறையில்
முக்காலும்
உனக்காய் அம்மா...
அவன் யாரென தெரியாது..
பேரென்ன தெரியாது
ஊரென்ன தெரியாது...
உறவாக சொன்னாய்
உறவை கொண்டேன்
உயிராக சொன்னாய்
உயிரை சுமந்தேன்....

நீ என்னை
வழி நடத்தினாய் - என்னை
உன்னில் கொடுத்தேன்
உனக்கு தெரியும்
எனக்கு - எது
ஏற்றம் என்று....
எனக்கு இதில்
வருத்தம் இல்லை
என்னை நீ
தாழ்த்தவும் இல்லை...

என்றும்
நீ என்னுயிர் தான்
என்னை கொடுத்தேன்
உன்னில் நான் தாயே..
என்னை நீ சுமந்தாய்
என்ன வலி கண்டாயோ..
நான் உலகில் நடமாட...
தொப்புள் கொடி பந்தம்
என்றும் புனிதம்
உனக்கு தெரியும் - எனக்கு
எது ஏற்றம் என்று...