Thursday, September 18, 2008

எனக்கான நீ

நினைவுகளின் விசும்பினின்று நீ
நித்தமும் மழை பொழிகிறாய்
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...


வசந்தம் வந்தெதிர்பார்க்க
வாழ்க்கைக் கடலில் நீந்தலானோம்
காத்திருப்பு தாளாமல்
கல்யாணம் எதிர் கொண்டோம்



ஓதவனம் தாண்டி- வாழ்க்கை
ஒளி சேர்க்க சென்று விட்டாய்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்

தொலைபேசியில் வாழ்வு கண்டோம்
ஒருவருக்கொருவர் ஒருவாமை இல்லாமல்....
ஒரு கால் நீ போகாமலிருந்திருந்தால்
ஓராயிரம் இன்பங்கள் காலடியில்...


வரும் நாளை எதிர் பார்த்து
வாயிலில் நின்றிருந்தேன்
வருடம் போனது தெரியவில்லை
வயிறும் பெருத்து போனதடா


வளை சூட நாள் பார்த்து
தொலைபேசியில் ஒலி கண்டாய்
தொப்புள் கொடி அறும் முன்னே
என் முன்னே நீ இருந்திடடா


பிள்ளை அழுகுரல் கேட்டவுடனே
உன் வதனம் என் முன் ஆடும்...
கிலேசத்துடன் நானிருந்தேன்
மயங்கிய நிலையினளாய்


எண்ணியது நடவாமல்...
வீடு வருவாய் என்றிருந்தேன்...
நம் குலக்கொழுந்தோடு

என்றுமில்லாமல்...
எனக்கான நீ
சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி....

Tuesday, August 19, 2008

ஒரு மாலையில்

பூங்காவின் நெரிசலில்
ஒரு ஓரமாய் நின்றிருந்தேன்
நிஜங்களின் நிதர்சனங்களும்
நிழலாடும் எண்ணங்களும்
அலைகளாய் ஆடி சென்றன
மனதுள்....
வார்த்தை பரிமாற்றங்களும்
வசந்தத்தின் கற்பனைகளும்
வாயிலின் முன்
நேர் கோடுகளாய்
வரிசையாய் சென்ற
எறும்புகளின் தேடல்களும்
எண்ணங்களின் இசை பாடல்களும்
எல்லையில்லா ஆசையாய் ....
வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து தட்டேந்திய
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்தலாய்...
எப்போதும் அந்த மரத்தின் அடியில்
நிற்கும் கிழவியை காண வில்லை
இன்று யாரும் இல்லை
நாளை யாரோ.....
நாளையும் செல்வேன்
வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண

Thursday, July 10, 2008

காதலுக்கு கண் உண்டு - சிறுகதை

எவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கறது...மனதுக்குள் நினைத்துக் கொண்டே விரல் நகத்தை சுவைத்துக் கொண்டு இருந்தாள் அகல்யா...கோடம்பாக்க புகைவண்டி நிலையத்தின் இரு பக்கங்களிலும் ரயில்கள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க இவளின்
மனமும் தடதடத்துக் கொண்டிருந்தது.
சாரி அகல்யா கொஞ்சம் லேட் ஆகி
போச்சு, வேகமா நடந்தா நீ திட்டுவ...ஒரே டிராபிக்..
அதான் பொறுமையா வந்தேன் என்ற கதிரின் குரல் கேட்டு நிம்மதி பெரு மூச்சு விட்டாள் ..
டேய் ...என்ன ஆச்சு ஏது ஆச்சுணு எனக்கு எவ்ளோ டென்ஷன் தெரியுமா...மூணு ட்ரெயின் போயாச்சு இன்னிக்கு லேட் தான் ...சரி பரவ
ால்ல ...நேர்ல போய் சொல்லிக்கலாம் என்றாள் அகல்யா.சாப்டியா அகல்யா இல்ல ஏதாவது டிஃபன் சாப்பிடறியா என்றவனுக்கு வேண்டாம்டா என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டு அவன் கை பற்றி புகைவண்டி வரும் பக்கமாய் நகரலானாள் .

எப்போதும் போல மூணாவது கம்பார்ட்
மெ ன்ட்ல ஏறிடலாம் அகல்யா.. அங்க தான் கூட்டம் கம்மியா இருக்கும் என்று சரியாக வந்து மூணாவது கம்பார்ட்மென்ட்ல் ஏறி ஒரு இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.மாலையும் அதே கம்பார்ட்மென்ட்ல் வீடு திரும்ப அந்தி சூரியன் மறைய துவங்குகையில் மிதமான காற்று வருட துவங்கியது.
அகல்யா நீ எப்போ என் கூடவே இருப்ப? எனக்கு உன்னை
விட்டு இருக்க முடியலடா..உன்னைஎங்கெல்லாம் கூட்டிட்டு போகணும் தெரியுமா...மெல்ல அவள் தோள் சாய்ந்து காற்றில் மிதக்கும் கூந்தல் வாசனை பற்றிய படி கூறலானான் ...தாஜ்மஹால், எகிப்து ப்ரமிட், ஈ ஃபில் டவர் இப்டி எல்லா அதிசயத்தயும் பள்ளிக்கூடம்
படிக்கும் போது கேள்வி பட்டிருக்கோம். உன்னை அங்கெல்லாம் கூட்டி போகணு
ம் அகல்யா . பக்கத்துல போய் தொட்டு ரசிக்கணும்..உன்னை ரொம்ப ஹாப்பியா வச்சுக்கணும், உன் கூடவே எப்போதும் இருக்கணும். எனக்கு இப்போ எப்டி இருக்கு தெரியுமா அப்டியே எங்கயாவது போய்டணும் போல இருக்கு.. சொல்லிக் கொண்டிருக்கும் போதே அகல்யாவின் கண்ணீர் துளிகள் அவனது வார்த்தைகளை ஆமோதிதத்து.
கதிர், நாலாவது ஸ்
டேஷ ன் வந்தாச்சுடா...அடுத்து இறங்கணும் ..விட்டுட போறோம்...
என்ற படி இருவரும் எழுந்து இறங்கினர். மாலைக்கதிரின் இதம் இருவரின் கவலையும்
மறைத்து கொஞ்சம் இதமாக்கியது. அகல்யா கண்டிப்பா நீ போய் தான் ஆகணுமா? நாளைக்கு சன்டே லீவ்...ப்ச் உன்னை பாக்கமுடியாது கொஞ்ச நேரம்
உக்காந்து பேசிட்டு போலாமா...என்ற கதிரின் கை பற்றி பக்கமாய் இருந்த பலகையில் அமர்ந்து அவள் கையை இருக்க பற்றி குழந்தையானான் கதிர்.
கதிர், இந்த சந்தோஷம் எப்போதும் இருக்குமாடா..உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லநீ மட்டும் தான் எனக்கு...நாளைக்கு உன் அப்பா அம்மா கூட என் வீட்டுக்கு வந்து பேசுடா ...
இனிமேலும் மறைக்க வேண்டாம்...கண்டிப்பா அவங்களால நம்மள புரிஞ்சுக்க முடியும்
என்ற அகல்யாவின் கைகளை இறுக்க பற்றினான்.
இன்னிக்கு நைட் எப்டியும் உன் அப்பா அம்மாகிட்ட பேசிட்டு நாளைக்கு வீட்டுக்கு வா கதிர்...உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது ..என்ன அகல்யா இப்டி சொல்ற..உனக்கு மட்டும் இல்ல எனக்கும்
தான் உன்னை விட்டு இருக்க முடியாது நீ எதை பத்தியும் கவலை படாத ..நான் பாத்துக்கறேன்...என்று சமாதானப்படுத்தி தேற்றினான் கதிர்...மக்கள் நடமாட்டம் குறைய ஆரம்பிக்க, நேரம் ஆவதை உறுதி செய்து வா அகல்யா கிளம்பலாம் லேட் ஆச்சு...நாளைக்கு எப்படியும் என் அப்பா அம்மாவுடன் வரேன் என்று பேசிக் கொண்டே
இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
காலை கதிரவன் உதய ஆரம்பிக்கும் நேரம், கதிரின் வருகைக்காக காத்திருந்தாள் அகல்யா.அவள் அறையை விட்டு வெளி வராமல் பக்கத்து மசூதியில் இருந்து வரும் தொழுகை சத்தம் கேட்டு மணி 9 ஆகி இருக்கும் என்பதை உறுதி செய்து, காலிங் பெல் சத்தம் கேட்கும் போதெல்லாம்
அகல்யாவின் இதயத் துடிப்பு இன்னும் அதிகமாகவே துடிக்க ஆரம்பித்தது.

இது அகல்யா வீடு தானே .....கதிரே தான்...குரல் கேட்டு உறுதி செய்தாள் ..உள்ளுக்குள் என்ன நடக்க போகிறதோ என பட படத்துக் கொண்டிருந்தாள்..ஆமாங்க...நீங்க....என்றபடி அகல்யாவின் அம்மா வந்து கேட்கவும் ..கதிரின் அப்பா, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என
துவங்கினார் .உக்காருங்க இதோ வந்துடறேன்
என்று கூறி அகல்யாவின் அப்பாவை அழைத்து வந்தாள் .
கதிரின் மௌனம் அகல்யாவின் மனதை பின்னி பிசைந்தது. அவனின் குரலுக்காக ஏங்கி தவித்தது .கதிரும் அதை அறியாமல் இல்லை...அவனும் அதையே எதிர்பார்த்திருந்ததால் இருவரின் பக்கமும் மௌனமே ராகமாகியது.
கதிர் நேத்து தான் எல்லாமே சொன்னான்.
உங்க பொண்ணு அகல்யாவும் என் மகன் கதிரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பராங்க. எங்களுக்கு இதுல ஏதும் ஆட்சேபம் இல்ல. உங்களுக்கும் சம்மதம்னா நல்ல நாள் பாத்து கதிருக்கும் அகல்யாக்கும் கல்யாணம் பண்ணிடலாம். ரெண்டு பெரும் ஒரே இடத்துல வேலை செய்றாங்க.. ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சு இருக்காங்க...அவங்க ரெண்டு
பேர் வாழ்க்கையை அவங்ககிட்டயே விட்டுடுவோம் என்று சொல்லி முடிக்கும் முன்பே கதிரின் அப்பாவை அகல்யாவின் அப்பா இறுக்க தழுவி கொண்டார்.
அந்த தழுவல் சம்மதம் என்பதை உணர்ந்த அம்மாக்கள் இருவரின் கண்களும் ஆனந்தத்தில்நிறைந்தது.
கதிர் நான் எதிர்பாக்கலடா...அம்மா அப்பா என்ன சொல்வாங்களோனு பயந்தேன் . நம்மள
சேத்து வச்சுடாங்க டா. கதிர், நீ இனிமே நான் செய்றததான் சாப்பிட போற..என்றவளுக்கு அதெல்லாம் என் அம்மா பாத்துப்பாங்க..நீ என்னை மட்டும் பாத்துக்கிட்டா போதும் என்ற குரல் கேட்டுஅனைவரும் சிரித்து வீட்டை கலகலப்பாக்கி விடை பெற்றனர்.

என்றும் இல்லாமல் அகல்யாவின் கன்னங்களில் செவ்வானம் குடி கொண்டிருந்தது. அம்மாடி நீங்க ரெண்டு பேரும் நல்லா இருங்கடா...இதான் எங்களுக்கு வேணும் ...கூடிய சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டு வர்றோம் என்ற கதிரின் பெற்றோரை நன்றியுடன் வழி அனுப்பினார்கள்.
நல்ல நாள் பார்த்து கோவிலில் அகல்யா கதிரின் விருப்பப்படி அவர்கள்
இருவரின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டும் அருகிருக்க மங்கல ஒலி முழங்க அகல்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான் கதிர் . மாலைக்கதிரவன் மறைய நிலவின் பிடியில் இருவரும் தள்ளப்பட்டனர். அகல்யா எனக்கு எப்டி என்னோட சந்தோஷத்த வெளிப்படுததறதுணு தெரில...நாம ரொம்ப குடுத்து வச்சு இருக்கோம்...கண்டிப்பா நாம நல்லா இருப்போம் அகல்யா
என்ற கதிரின் கூந்தல் கோதியபடி கதிர், எனக்கு உன்னைபாக்கணும் போல இருக்குடா...அடுத்த ஜென்மம் எனக்கு கண்டிப்பா இருக்கணும் ...உன்னை பாக்கணும்பாத்துக்கிட்டே இருக்கணும்...என்றவளை இறுக்கி அணைத்து எனக்கும் தான் அகல்யா என்றான் கதிர்....அகல்யா இனிமே ரெண்டு பேருக்கும் கைத்தடி வேணாம் எனக்கு மட்டும் போதும். உனக்கு, இனி நான் தான்
கைத்தடி என்று அவளுடையதை தூக்கி எறிய கதிரை தொடர்ந்தாள் அகல்யா கதிர்.

Saturday, June 21, 2008

முகவரி கொடுத்த - உன்
கொலுசை கொஞ்சம்
திருப்பி கொடு - என்
இதய ஒலிக்கு
உயிர் ஊட்டட்டு ம்

மூதாட்டி

சிங்கார சென்னை
ஆரவார மிக்க சாலை
அலுவலகம் பயணிக்கும் மக்கள்
ஆரவாரமாய்....
தூரமாக ஒரு மூதாட்டி
கிழிந்த காதில் பாம்படம்
வெற்றிலை மென்ற சிகப்பில்
கரையூன்றிய பற்கள்...
வயது முதிர்வின் அடையாளம்
தோலின் சுருக்கங்கள்
70 அல்லது 80 இருக்கும் !
நரம்புகள் புடைத்திருக்கும்
சங்குக் கழுத்து வெற்றிடமாய் !
தளர்ந்த கால்கள்
காலணி கூட இல்லாமல்!
புரையோடிய கண்கள் - ஒரு பக்கமாய்
தழும்பியிருக்கும் கண்ணீர் !
கூனிக் குறுகிய தேகம்
ஏக்கத்துடன் பார்வை
பெற்ற மக்கள் வருவாரோ!
கையில் தாங்கியிருக்கும்
மஞ்சள் நிற கைப்பை !
எந்த முதியோர் இல்லம் செல்ல
இங்கு காத்திருக்கிறாய் அம்மா?
வாழ்ந்தே ஆக வேண்டும்
வயிற்றுக்காக ...
சிக்னல் ஓரமாய்
நான் கண்ட மூதாட்டி
கவி பாட வைத்தவள் - என்னை
கலங்க வைத்தவள்

Thursday, June 19, 2008

பூஞ்சோலை

புளியங்காட்டு தோப்புக்குள்ள
புளி பறிக்க நா போனேன்
பூஞ்சோலை என் பேரு
பொன்னாத்தா பெத்த மவ....

ஆனா ஆவன்னா அறியலையே
அப்பனாத்தா படிக்கலையே
கொட்டு வாங்கி படிச்சாலும்
புத்தியில ஏறலையே

வெளகெண்ணை வழிச்சு சீவி
ரெட்டை சடை பூச்சூடி
பள்ளிக்கூடம் போக சொன்னா
பாண்டியாட போனேனே

தெம்மாங்கு காத்து வாங்கி
தெருவெல்லாம் ஆடி புட்டு
அரச மர நிழலுக்கு தான்
துணையாக நின்னேனே

ஆத்துல மீனு புடிச்சு
கரையோரம் நெருப்பு மூட்டி
வக்கணையா வறுத்து தின்னு
வீடு வந்து சேந்தேனே

ஆண்டிபட்டி அரசம்பட்டி
அய்யாளத்து பாப்பம்பட்டி
ஆச மச்சான் நடந்து வந்தான்
பட்டு சட்டை வேட்டி கட்டி

ஆத்தோரம் புள்ளையாரு
ஆலமர அய்யனாரு
நேந்துக்கிட்டேன் நிசமாவே
மூணு முடி நீ போட...
அயித்த மகன் வந்தானேனு - ஆத்தா
ஆடு வெட்டி குழம்பு வச்சா
அயிர மீனு வறுத்து வச்சு....
உசுரா நானும் நின்னேனே

ஆட்டுக்கடா வெட்டி போட்டு
எலும்புக்கறி எடுத்து வச்சேன்
நறுநறுனு கடிச்சு துப்பி
நாசூக்கா கண்ணடிச்சான்
கண்ணால சாடை காட்டி
கை கழுவ மாமன் போக
பின்னால நான் போயி
கம்மாங்கரை சேந்தேனே....
பின்னால மாமன் வந்து
முன்னால என்ன கட்டி...
முழு முகத்த மறைச்சு வச்சு
முழம் பூவு குடுத்தானே
ஆச மச்சான் திரும்பி வர
ஆறேழு வருசமாகும்
ஆறேழு வருசங்கூ ட
ஆத்து நீரா ஓடி போகும்

நா என்னனு சொல்லி
புரிய வப்பேன்
நீ இல்லாத நாள
எதுக்குள்ள எழுதி வப்பேன்

வெவரம் புரியா என்ன
விட்டு தொலைஞ்சு போனா
நான் எங்க போவேன்டா
நாண்டுகிட்டு சாவேன்டா
நின்னா உன்ன காங்கேன்
உக்காந்தா உன்ன நெனைக்கேன்
உசிரு போயி சேருமுன்னே
வெரசா நீயும் வந்துடைய்யா
பெத்த மனசு தாங்காம
மருத்துவச்சிக்கு சொல்ல... - இது
மேலுக்கு வந்த நோயில்ல
மச்சான் மேல வந்த நோயின்னு ....
மச்சான் உன்ன காங்காம
மாமாங்கமா காத்திருக்கேன்
மார்கழி மாசக் குளிரு கூட
கத்திரி வெயிலா கொளுத்துதய்யா
எங்க நீ இருந்தாலும்
பூஞ்சோலை இங்க இருக்கா....
உசிர இறுக்கா புடிச்சுகிட்டேன்
உன் மடில உசிர விட....


Friday, June 13, 2008

தூரிகையாய்

பனித் துளி வந்தமர்ந்த மலர்களில்
ஒன்றாகவேனும்
முகில் கூட்டம் குடி கொள்ளும்
மலையாகவேனும்
வானவில் கட்டிக்கொண்ட
நிறமாகவேனும்
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேனும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேனும்
தென்றல் காற்றில் வீசப்பட்ட
சருகாகவேனும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேனும்....

Sunday, May 18, 2008

சீனா பூகம்பத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி

பூமித்தாயே...
புவியைக் காத்தவளே...
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்...

மலையுண்டு

மலை சூழும் முகிலுண்டு
அலையுண்டு
இளைப்பாற கரையுண்டு....
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்?

வசந்தமாய் இருந்த நீ - இன்று

ஒன்றும் இல்லாதவளாய்
இல்லை இல்லை
எப்படி சொல்வது
ஒன்றும் இல்லாதவள் என்று...?

பல்லாயிரம் உயிர்களை

காவு கொண்டு - இன்று
அமைதியாய் இருக்கிறாய்
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம் ?

நீ
கொடுத்த

சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?

உறவுகளை இழந்தவர்கள்

உடைமைகளை இழந்தவர்கள்
பிள்ளைகளை இழந்தவர்கள்
பெற்றோரை இழந்தவர்கள்
எத்தனை ஆயிரங்கள் !
எத்தனை ஆயிரங்கள் !

இத்தனை உயிர்கள் - உனக்குள்
இரையாகிவிட்டு

உன்னுள் உறங்கி விட்டார்கள்
காவு கொண்ட நீ
களைப்பாறுகிறாய்
என்ன குறை
உனக்கு ஏனிந்த சீற்றம் ?

இருப்பவர்களை வாழ விடு

உன்னை நம்பி இருப்பவர்களை
உய்ய விடு....

உலகுள்ள வரை

உன்னை மறவோம் ...
நீங்காத நினைவலைகளையல்லவா
நீ கொண்டாய்...உனக்குள்ளே
ஒரு ஆணையிடு

எல்லை கோடு இடு...

போதுமம்மா தாயே

உன் சீற்றம் ....
உன் மடிவந்தோரை
வாழவிடு...

இனி ஒரு
ஜென்மம் எனினும்

பூகம்பப்பிறவி
உனக்கு வேண்டாம்

வேண்டவே வேண்டாம்....

Wednesday, May 14, 2008

சுடும் நிலவு


அறுவை சிகிச்சை அறை பார்த்து
அறை கூவல் எழுப்பும்
அருகாமையின் மத்தியிலும்
நம்பிக்கை சுடர் கொள்ளும் மங்கை...

கொண்டவனை காப்பாற்ற
கையேந்தும் நிலையிலும் - தன்
மாங்கல்யம் காக்க
மானம் காக்கும் நங்கை
வளைவுகளின் கிடுக்குகளில்
எங்கிருந்தோ கசிந்து
கொண்டிருக்கும் தண்ணீராக - இவள்
கவலையுடன் சிந்தும் கண்ணீர்...

ஏங்கும் விழிகளுடன்
தண் நிலவு கண்டு
வானம் பார்த்தாலும்
இவளுக்கு மட்டும் - அது
சுடும் நிலவாய்....

Tuesday, May 6, 2008

மரிக்கொழுந்து

பருத்திக்காட்டு விளைச்சலிலே
மச்சான் உன்ன பாத்துப்புட்டேன்
பாளையத்து மகமாயி
பக்கம் இருந்து துணை இருப்பா

கம்மங்கூழ கரைச்சு வச்சு
கருவாட்டுக் குழம்பு கொண்டாந்தேன்
உன் கைய புடிச்சு கரை சேர
கருமாரி வந்து காத்திடணும்

வானத்த பாத்து நிக்கேன்
வழியெல்லாம் தேடி அலைஞ்சேன்
மாமன் உன்ன சேரத்தானே
மாமாங்கமாய் காத்து கெடக்கேன்

அப்பனையும் ஆத்தாளையும் விட்டுப்புட்டு
உன்ன மட்டும் நம்பி வந்துப்புட்டேன் கழுத
விளையாட்டா ஏதும் செய்யல
விட்டுப்புடாத ஆமா

மஞ்சத் தண்ணி ஊத்தயிலே
மாமா உன்ன நினைச்சுப்புட்டேன் - ஒரு
மஞ்சத் தாலி கட்டிப்புடு
உன் கைய கோத்துக்கிட்டு வாரேன்

தென்ன மரக் கீத்து போட
தாய் மாமன் நீயும் வந்த
அருக்கானி சடை போட்டு
அழகா நானும் நிக்கேன்

மாமனுக்கு வாக்கப்பட்டு
வாழத் தானே வந்தேன்
மரிக்கொழுந்து வாசத்துல
மயங்கி நீயும் போன

பொட்டு வச்சு பூ முடிச்சு
புதுப்பொண்ணா வாரேன்
பூவாத்தா வாழ வப்பா
பூ மாலை நீ போடு....

Tuesday, April 29, 2008

சின்ன வயதில் பாடிய பாடல்கள்

எப்போதும் நினைவில் நிற்கிற பாடல் இது தான்.....
1)நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல துதி செய்....

அடுத்தது கை வீசம்மா கை வீசு... :)
2)கை வீசம்மா கை வீசு
கடைக்கு போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் திங்கலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் நடக்கலாம் கை வீசு
கோவிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு......

3)தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும்
உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணாவுக்கு ரெண்டு
எனக்கு ஒன்னு..

இந்த பாட்டு அம்மா சொல்லி தரும் போது நான் நிறைய
கேள்வி கேட்டதாக சொல்லி இருக்காங்க ...
எனக்கு தான் அண்ணாவே இல்லையே
அப்புறம் ஏன் அவனுக்கு ரெண்டு?(இது தான் என்னுடைய கேள்வி :))

மழை வரும் போதெல்லாம் பாடி மகிழ்ந்த பாடல்....

4)வானத்திலே திருவிழா
வழக்கமான ஒரு விழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூரலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் ஆடுமே
தண்ணீரிலே ஆடுமே...

இந்த பதிவினை துவங்கி
சிறு வயது பாடல்களை
பதிவுசெய்ய வைத்து ....
மலரும் நினைவுகளை
அசை போட செய்த
பிரேமுக்கு ....ஒரு ஓ ஓ ஓ
நன்றி பிரேம்....

நான் யாரை மாட்டி விட போறேனா.....
இவங்க மூணு பேரை தான்...:)


நிலா ரசிகன்

ப்ரியன்

ஷைலஜா











Friday, April 25, 2008

அந்த கணம்

ஒரு மாலை வேளை
ஒரு வழி பாதையில்
நினைவுகளின் சிறையில்
நின்று கொண்டு இருக்கிறேன்

சன்னல் ஓரம் கண்ணீருடன்
சிறு சிறு ஆனந்தம் பருகிய
தினங்களை
திரும்பி பார்க்கிறேன்

இரட்டை சடை முடித்து
கட்டி அணைத்த புத்தகப் பையுடன்
கற்பனை சிதற விட்டு
பள்ளி நோக்கி சென்றேனே
அந்த கணம்...

மாலை வேளை வகுப்பு முடிந்து
இல்லம் திரும்பும் வரை - ஒரு
இதயம் என்னை தொடர்ந்ததே
அந்த கணம்...

வீட்டு பாடம் எழுதுகையில்
புத்தக நடுவில்
பச்சரிசி போட்டு
மையிலிறகு குட்டி போட்டதை
ரசித்தேனே அந்த கணம்...

ஊரே மழைக்கு ஒதுங்கி நிற்க
குடை விட்டெறிந்து
நானும் நீயும் மட்டும்
நனைந்தோமே
அந்த கணம்...

ஒரு மாலை வேளை
ஒரு வழி பாதையில்
இலையுதிர் கால சிதறல்களாய்
என்றும் நிழலாடும்
அந்த கணம்...

Thursday, April 10, 2008

இப்படிக்கு ரோஸ்




இப்படிக்கு ரோஸ் திருநங்கைகள் பற்றிய தவறான கருத்துக்களுக்கு மத்தியில் இந்த சமூகத்திற்கு கொடுக்கும் ஒரு சாட்டையடியாக விளங்கும் விஜய் தொலைக்காட்சி வழங்கிக் கொண்டிருக்கும் "இப்படிக்கு ரோஸ்" வரவேற்கதக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி.


03-04-08நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள்ஹேமா ஆசிரியை, ஸ்ரீதேவி மாடல்மற்றும் தனது எழுத்து மூலம் சமூகத்தின் பார்வையை
தனது பக்கம் திசை திருப்பிய "நான் சரவணன் வித்யா "புகழ்
லிவிங் ஸ்மைல் வித்யா"...நிகழ்ச்சி பார்த்த எனக்குள் முதலில் உண்மையாகவே இவர்கள் திருநங்கைகள் தானா என்ற ஒரு பெரிய சந்தேகம். மூவரின் வார்த்தைகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது அவர்களின் தன்னம்பிக்கை.


திருநங்கை ஹேமா திருமணம் ஆனவர் அதிலும் காதல் திருமணம் என்று கூறிய பொழுது சமூகத்தில் இன்னும் இருதயம் உள்ளவர்கள் உலவுகிறார்கள் என்பது புலப்பட்டது.




அவரும் அவருடைய கணவரும் ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து
வளர்க்கிறார்கள் என்று கேட்டபொழுது அவர்கள் மேல் உள்ள மரியாதை
இன்னும் மேலோங்கியது




அவருடைய அம்மா மற்றும் கணவர் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டுஅரவணைத்ததுஉண்மையாகவரவேற்கதக்கது.ஊனமுள்ள பெண்களையும்,கைம்பெண்களையும் வாழ்க்கைத் துணைவியாக ஏற்று கொள்ள தயங்கும் இந்த சமூகத்தில் இருக்கும் ஆண்களுக்கு மத்தியில் திருநங்கை ஹேமா அவர்களை திருமணம் புரிந்து திருமதி ஆக்கிய அந்த மனிதருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல ...




அடுத்தது ஸ்ரீதேவி மாடல் துறையில் இருப்பவர்.அவருடைய வீட்டில்
பெற்றெடுத்த தாயே ஒதுக்கிய சமயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்வை
எதிர் கொண்டவர்.மும்பையில் எட்டு வருட வாழ்க்கைக்கு பிறகு மீண்டும்
பிறந்த வீடு வந்த பொழுதும் ஏற்க மனமில்லை பெற்றவளின் இதயத்தில் ...
அவருடைய அண்ணியின் உதவியாலும் ஆதரவாலும் கொஞ்சம் கொஞ்சமாக
தாயின் அன்பிற்கு பாத்திரமானவர். இப்பொழுது அந்த தாய் அவரை ஒரு
குழந்தையாக பாவிக்கி றார் என்று கூறிய பொழுது தாய்மை வென்றது. எல்லோரையும் தனது எழுத்தால் கவர்ந்தவர் லிவிங் ஸ்மைல் வித்யா. பெயரிலேயே அவரின் புன்னகை எடுத்து உரைக்கிறது அவரின் தன்னம்பிக்கை. ஒவ்வொரு வார்த்தை பேசும் பொழுதும் அப்படி ஒரு தெளிவு.




சென்னையில் நடந்த புத்தக கண் கா ட் சியில் இவர் எழுதிய நான் (சரவணன் ) வித்யா வாங்கி படித்த பொழுது தான் தெரிந்தது திருநங்கைகள் இந்த சமூகத்தில் எதிர் கொள்ளும் அவலம்.புத்தகம் வாங்கி படித்து கலங்கியவர்களில் நானும் ஒருத்தி.நேற்றைய நிகழ்ச்சியில் நேரில் கண்ட பொழுது அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் திரு நங் கை க ளை பற்றி தவறாக நினைப்பவர் களுக்கு ஒரு பாட ம்.நடந்த சில நிகழ்வுகளை கண் முன் நி றுத் திய பொழுது படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிக்கவே செய்தது.நிகழ்ச்சியை வழங்கிய திருநங்கை ரோஸ் இவரிடம் காதல் அனுபவம் உள்ளதா என்று கேட்ட பொழுது வெட்கத்துடன் ஒப்பு கொண்டார். அவருடைய குடும்பத்தாரும் ஹேமாவின் குடும்பத்தினரை போல ஒப்பு கொண்டு விரைவில் திருமதி பதவி அடைய வித்யாவிற்கு வாழ்த்துக்கள் .ஒவ்வொரு நிகழ்வுகளை சொல்லும் போதும் கண்களில் கண்ணீர் தழும்பினாலும் புன்னகை கண்களையும் இதழையும் தழுவி கொண்டே இருந்தது.




லிவிங் ஸ்மைல் வித்யாதனக்கு இட்டு கொண்ட பெயர் மிகவும் பொருத்தம் என்பதை அழுத்தமாக உறுதி படுத்தியது.நிகழ்ச்சியை நே ர் த் தி யா க கொண்டு சென்ற திருநங்கை ரோஸ் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மொத்தததில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி சமூகததில் ஒரு மிக பெரிய மாற்றம் கொண்டு வரும் என்று
நினைத்து பார்க்கும் பொழுது ஒரு மன நிறைவு.நல்ல பல நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டு இருக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு "இப்படிக்கு ரோஸ்" இன்னுமொரு "மைல் கல்"இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டாலாவது சமூகத்தில் திருநங்கைகள் மீதுள்ள தவறான எண்ணங்கள், அருவருப்பான பார்வைகள் விலகுமாயின் திருநங்கைகள்வாழ்வும் ஒளி மயமாகும் என்பதில்
எள்ளளவும் அய்யமில்லை.




திருநங்கைகளின் விருப்பப்படி அரசும் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம்
கொடுக்குமாயின் இந்த சமூகத்தில் திருநங்கைகள் திருப்பங்கள் அளிப்பார்கள் சிகரங்கள் பல தொடுவார்கள்.

Wednesday, April 2, 2008

இயலாமை

சுற்றி படர்ந்த கொடிகளும்
கண்ணுக்கு விருந்தான காட்சிகளும்
பக்கத்தில் இருந்த விரிந்த புத்தகத்தின்
பக்கங்களாய் காற்றில் பறக்க தொடங்கியது

மேலே பறந்த வண்ணத்து பூச்சிகளின்

சிறகினுள் அடைபட்ட வானமாய்
தவித்ெழுந்தது
ஏழை சிறுமியின் மீதான பார்வை...

கோடிட்டு காட்ட முயன்று
தோற்று போயின
குழவியின் விரல்கள்...

இதழ் பிரித்து மொழி பேச
இயலாமல் போனது
தூரமாய் இருந்த
கிழவியின் காய்ந்து போன
இதழ்கள்

எல்லையற்று விரிந்த
உலகின்
மீதான பார்வை
இன்னும்
மலராத மொட்டுக்களாய்.

Thursday, March 20, 2008

ஜோசியன்

நாலு பக்க நோட்டுக்குள்ள
நம்ம கத எழுதி நிப்பான்
நாடாளும் ராசானாலும்
ஆறடினு சொல்ல மறப்பான்

உண்டான வாழ்க்கையில

உளவு பல இருக்குதுன்னு - இவன்
உள்ளூரு கோவிலுக்கு
நேர்த்தி கடன் செய்ய வப்பான்

விதி தானு சொல்லி

விவரமா விளக்கி - அவன்
வீடு வாங்க வழி செஞ்சு - உன்ன
வீதியில நிறுத்திடுவான்

கொண்ட குடும்பம் விளக்கெரிய

விதிய நம்பி நீக்கறியே - உன்
மதி எங்க போச்சுதடா
தறி கெட்ட மானுடனே

Thursday, March 6, 2008

அம்மாவுக்காக.....


பிறந்த நாள் முதல்
அம்மாவின் அரவணைப்பு
இன்று வரை....

என் அழுகுரல் கேட்டு
அணைத்தெடுத்து
உதிரம் வார்த்தவள்

ஆள்காட்டி விரல் பிடித்து
உலகை காண்பித்தவள் ...
பள்ளி பருவ நாட்களில்
பாடம் சொல்லி கொடுத்தவள் - என்
பார்வையயை தீட்டி
செதுக்கியவள்
பயிற்றுவித்தவள்....

பெண்மை எனும் நேரம்
நான் அடைந்த பொழுது
கண்ணிமைக்காமல் காத்தவள்....
கல்லூரி வாழ்வில்
என் தோழியவள்
காதலி அவள்...
நான் உறங்க
அவள் விழிப்பாள்...
நான் வாழ கண்ணீர் சிந்துவாள்...
ஆயிற்று
அப்படி இப்படி என்று
இருபத்தி நான்கு...

என்னை அறிமுகப்படுத்தியவள் - இன்று
இன்னொருவன் கையில்
கரம் சேர்க்க ஆயத்தம்....
கற்பனைகள் சிதறும் என்னுள்
காட்டாற்று வெள்ளமாய்
காதலனுடன் அல்ல..என்னை

உலகுக்கு அறிமுகம் செய்ய...
விவாதம் செய்ய வில்லை
விவாஹம் செய்ய சம்மதம் -என்
ஆசைகளை துறந்தேன்
அறிவு கொடுத்தவளுக்காக...
முழு மனதுடன்
மணவறையில்
முக்காலும்
உனக்காய் அம்மா...
அவன் யாரென தெரியாது..
பேரென்ன தெரியாது
ஊரென்ன தெரியாது...
உறவாக சொன்னாய்
உறவை கொண்டேன்
உயிராக சொன்னாய்
உயிரை சுமந்தேன்....

நீ என்னை
வழி நடத்தினாய் - என்னை
உன்னில் கொடுத்தேன்
உனக்கு தெரியும்
எனக்கு - எது
ஏற்றம் என்று....
எனக்கு இதில்
வருத்தம் இல்லை
என்னை நீ
தாழ்த்தவும் இல்லை...

என்றும்
நீ என்னுயிர் தான்
என்னை கொடுத்தேன்
உன்னில் நான் தாயே..
என்னை நீ சுமந்தாய்
என்ன வலி கண்டாயோ..
நான் உலகில் நடமாட...
தொப்புள் கொடி பந்தம்
என்றும் புனிதம்
உனக்கு தெரியும் - எனக்கு
எது ஏற்றம் என்று...

Thursday, February 14, 2008

நானும் ஒற்றை ரோஜாவும்








என் விழிகளுக்கான தேடலில்
உன்னை தந்தாய்
காதல் எனும் கவிதை தந்தாய்...

பனி துளி ஒவ்வொன்றிலும்
உன் அழகு முகம்...
என் கண்ணீர் துளி ஒவ்வொன்றிலும்
நம் காதல் பிம்பம்...

காதல் எனும் கோட்டையில்
கைதியாகிய நான்...
உன் மன கோவிலில்
பாடி திரியும் பட்சி...

ஒன்றோன்றாக உன்னிடம்
இருந்து திருடிய என்னை
மொத்தமாக திருடி விட்டாய்
உன் ஒரே ஒரு புன்னகையால்...

உன் நினைவுகளின் பிடியில்..
நானும்
நீ கொடுத்த
ஒற்றை ரோஜாவும்...

Friday, January 11, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


எத்தனையோ எதிர் பார்ப்புகளுடன்

காத்திருந்து

காதலனின் வருகையில்

கொண்டாடும் மௌனம்....

உன் விழி பார்வையில்

வார்த்தைகளின் விளையாடலில்

ஒளிந்திருக்கும் மௌனம்...

உன் சீண்ட ல்களின்
சத்ததில்லும்

குரு குரு பார்வையிலும்

உள்ளம் பூரிக்கும் மௌனம்...

உன்னை என்னவென்று

வர்ணிக்க முடியாமல்

வார்த்தைகளுக்கான

தேடலில் மௌனம்...

மௌன அழகில்...

உன் உறக்கத்தில் கூட

ஆயிரம்

அர்த்த அலைகள்.....